Sunday 19 December 2010

அரசு மருத்துவமனை முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்


மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஏழை மக்களின் உயிருடன் விளையாடும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் நகரில் நேற்று (17-12-2010) அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பகல் 2 மணிக்கு மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டத் தலைவர் யூசுப் அலீ தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.ஏ. செய்யது அலீ, பொருளாளர் எஸ்.எம். ஷாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலப்பாளையம் நகரத் தலைவர் ரோஷன், செயலாளர் சிராஜ், பொருளாளர் நிவாஸ், துணைத் தலைவர் அஷ்ரப், துணைச் செயலாளர் ஞானியார் உட்பட ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். தவறு செய்யும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன

Wednesday 8 December 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு கண்டனப் போராட்டம் தேதி மாற்றம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்து ஜனவரி 4 ல்அறிவித்திருந்த கண்டனப் போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ல் சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday 7 December 2010

துபையில் நடைபெற்ற தவ்ஹீத் எழுச்சி மாநாடு



கடந்த 03.12.10 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலத்தின் சார்பாக தவ்ஹீத் எழுச்சி மாநாடு ஷேய்கா ஹின்த் பின்த் அல்மக்தூம் ஸ்போர்ட்ஸ் ஹாலில் நடைபெற்றது.

மஃரிப் தொழுகைக்குப் பின் தொடங்கிய இம்மாநாட்டில் கலந்து கொண்ட மக்களின் கூட்டம் துபாயில் தவ்ஹீதின் எழுச்சியை பறைசாற்றும் முகமாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

துபாய் மண்டலத் தலைவர் முஹம்மது நாஸிர் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் தலைமையில், மண்டல நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சிறப்புப் பேச்சாளர்களாக யுஏயி மண்டல ஒருங்கிணைப்பாளர் சகோ.ஹாமீன் இபுறாஹீம் அவர்கள் ‘தடம்புரளாத தவ்ஹீத் ஜமாஅத் அன்றும் இன்றும்‘ என்ற தலைப்பில் தவ்ஹீத் கொள்கையில் தடம்புரளாமல் அன்றிலிருந்து இன்று வரை ‘தவ்ஹீத் ஜமாஅத்’ மட்டுமே நிற்கிறது என்பதை மக்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.

தாயகத்திலிருந்து இம்மாநாட்டிற்காக வருகை தந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி. ஷம்சுல் லுஹா ரஹ்மானி அவர்கள் ‘வஞ்சிக்கப்பட்டோரின் கோரிக்கைகள்’ என்ற தலைப்பில் இந்திய நாட்டில் இஸ்லாமிய சமுதாயம் நடத்தப்படுகின்ற முறையையும் அதில் ஒரு பகுதிதான் பாபர் மஸ்ஜித் இடிப்பு.அதை மீட்க வேண்டிய கடமை ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் உள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்தினார்கள்.

இம்மாநாட்டிற்குஅபுதாபி,அல்அய்ன்,அஜ்மான்,ராஸல்  கைமா,ஃபுஜைரா,ஷார்ஜா, துபாய் ஆகிய மண்டலங்களிலிருந்து கொள்கைச் சகோதரர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

மண்டலச் செயலாளர் அபுதாஹிர் மற்றும் திருச்சி ஹுஸைன் அவர்கள் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக களப்பணி ஆற்றினார்கள்.
இறுதியில் மண்டலச் செயலாளர் அபுதாஹிர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். பிறகு துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!