Tuesday 10 November 2009

செல்போன் காதலில் சீரழியும் செல்லப்பிள்ளைகள்

பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம்.



காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.



யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.



பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை.



இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது.



குறிப்பாக இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் பல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது.



பள்ளி விட்டு வந்ததும் நமது பிள்ளைகள் பாடம் படிப்பதை விட்டு விட்டு, படம் பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சீரியல்களின் பிடியில் கட்டுண்டு இருக்கும் நாம் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது பிள்ளைகளும் சேர்ந்தே பார்க்கின்றனர்.



நம்மால் அந்தப் பிள்ளைகளைத் தடுக்க முடிவதில்லை.

நம் வீட்டிலோ, வெளியிலோ ஆண், பெண் இருவர் கட்டிப் புரளும் காட்சிகளைப் பார்க்க முடியாது. குளிக்கும் பெண்கள் கூட ஆபாசமாகக் குளிப்பது கிடையாது.



ஆனால் இந்த சினிமாக் காட்சிகளில் படுக்கையறைக் காட்சிகள், ஆபாசக் குளியல் காட்சிகள் அப்பட்டமாக அப்படியே காட்டப்படுகின்றன. இந்தக் காட்சிகளைத் தான் டி.வி.களில் பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.



மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன. இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகின்றனர். உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டுகின்றனர். அவர்கள் தேர்வில் தோற்றதற்குத் தாங்களும் ஒரு காரணம் என்பதைப் பெற்றோர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.

செல்லப் பிள்ளைக்கு ஒரு செல்போன்



பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.



இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர். செல்போன்களால் படிப்பு பாழாகின்றது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.



செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.



செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்களின் பட்டியலில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம்.



1. நீலப்படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவை நம்முடைய பிள்ளைகளின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பரிமாறவும் படுகின்றன.



2. அழகான மாணவிகள் அவ்வப்போது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ படம் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பல மாணவர்களின் பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.



3. SMS (Short Message Service) என்பது இப்போது Sex Message Service ஆக மாறி விட்டது. அந்த அளவுக்கு ஆபாசச் செய்திகள் இதில் பரிமாறப்படுகின்றன.



4. தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள்: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.



அண்மையில் நம்முடைய ரகசிய கண்காணிப்புக் குழுக்கள் மூலம், மகளிர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கோச்சிங் சென்டர்களைக் கண்காணித்ததில் பல அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன.



பருவமடைந்த பெண் பிள்ளைகள் சர்வ சாதாரணமாக வாலிபர்களுடன் செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாறுகின்றனர்.



பல சந்து பொந்துகளில் சந்திப்புகளும் நடைபெறுவதை அறிய முடிந்தது.



பக்காவாக உடல் முழுவதும் முக்காடு போட்ட பருவ வயதுப் பெண்கள் இதில் முன்னணியில் உள்ளனர்.

ஏற்கனவே வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் செல்போன் செக்ஸில் பலியாகி அந்நிய ஆடவருடன் ஓடிப் போகும் கொடுமை ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.



இதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது, பள்ளிக்கூடம் செல்லும் பருவ வயதுப் பிள்ளைகள் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவல் நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கின்றது.



இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கீழே தருகிறோம்.



தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்காமல் இருத்தல்.



ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.



“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர) நூல்: புகாரி 6243



இந்த ஹதீஸில் வருகின்ற கடைசிக் கட்ட விஷயத்தைத் தவிர அனைத்து விஷயங்களும் செல்போன்கள் வழியாக நடக்கின்றன.



கடைசிக் கட்டத்தை அடைய வேண்டும் என்று அவர்கள் உறுதி கொள்ளும் போது, ஓடிப் போக ஆரம்பிக்கிறார்கள். அப்போது நாம் கைசேதப்பட்டுப் பயனில்லை.



செல்போன் இல்லாவிட்டாலும் பள்ளி செல்கின்ற ஆண், பெண் பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.



அவ்வாறு செலுத்தாவிட்டால் கீழ்க்கண்ட ஹதீஸின்படி அல்லாஹ்விடத்தில் நாம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.



உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைபர் பொறுப்பாளி யாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளி யாவான்.



தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப் படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.



அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 893



எம். ஷம்சுல்லுஹா:



Tuesday 30 June 2009

அண்டைவீட்டாரின் உரிமைகள்

ஓர் இறை நம்பிக்கையாளர் தனது அண்டை வீட்டாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், அண்டை வீட்டாருக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளையும் பார்த்து வருகிறோம். அவற்றை மேலும் பார்ப்போம்.
தொல்லை தருதல்
வீட்டில் ரேடியோ, டேப் ரிக்கார்டர், டி.வி. போன்றவற்றை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் அண்டை வீட்டாருக்குக் கடும் சப்தத்தை ஏற்படுத்தித் தொல்லை தருவது, அல்லது சண்டையிட்டுக் கொண்டு அடுத்தவர் உறக்கத்தைக் கெடுப்பது என்று எந்த வகையிலும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக்கூடாது.
”அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர், தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தர வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)
நூல்: புகாரீ 5187

அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்க மாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்குகிறது.
”அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”எவனுடைய நாச வேலைகளி­ருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் தான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ர­)
நூல்: புகாரீ 6016

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன் என்று மூன்று தடவை நபிகளார் கூறியது, அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளக்குகிறது. அண்டை வீட்டாருடன் தொடர்ந்து பகைமைப் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் இந்த ஹதீஸை ஆழமாகச் சிந்திக்கட்டும். அண்டை வீட்டாருக்குத் தொல்லைகள் தருபவன் சுவர்க்கம் புக முடியாது என்ற கடுமையான எச்சரிக்கையையும் நபிகளார் செய்துள்ளார்கள்.
”எவனுடைய நாச வேலைகளில் இருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் சுவர்க்கம் செல்ல முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)
நூல்: முஸ்­ம் 73

நல்லறங்கள் பல புரிந்தும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தந்தால் அவரும் நரகம் புகுவார் என்பதை விளக்கும் இன்னொரு நபிமொழி.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாகக் கருதப்படுகிறாள்; ஆனால் அவள் அண்டை வீட்டாருக்குத் தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இவள் நரகில் இருப்பாள்’ என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத் தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இவள் சுவர்க்கத்தில் இருப்பாள்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)
நூல்: அஹ்மத் 9298

”ஒரு அடியானின் உள்ளம் சரியாகும் வரை அவனுடைய ஈமான் சரியாகாது. அவனுடைய நாவு சீராகும் வரை அவனுடைய உள்ளம் சரியாகாது. யாருடைய அண்டை வீட்டார் அவனின் நாச வேலையி­ருந்து பாதுகாப்பு பெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது” என்று நபிகளார் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ர­)
நூல்: அஹ்மத் 12575

மாபெரும் குற்றம்
அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் அவரது நம்பிக்கைக்குரியவராகத் திகழ்வது அவசியமாகும். பக்கத்து வீட்டில் இருக்கிறார்; அவர் நல்லவர் என்று நம்பி வெளியூர் செல்லும் போது அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் நடந்து கொள்ள வேண்டும். அண்டை வீட்டார் வெளியூர் சென்று விட்டார்; எனவே நாம் அங்கு சென்று திருடலாம், விபச்சாரம் செய்யலாம் என்று எண்ணி தவறான காரியங்களில் ஈடுபட்டால் அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும். அதற்குக் கடுமையான தண்டனையும் வழங்கப்படும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் ”அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று சொன்னார்கள். நான், ”நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்” என்று சொல்­ விட்டு ”பிறகு எது?” என்று கேட்டேன். ”உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று சொன்னார்கள். ”பிறகு எது?” என்று நான் கேட்க, அவர்கள், ”உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ர­)
நூல்: புகாரீ 4477

பொதுவாக விபச்சாரம் செய்தல் ஒரு குற்றம்; நம்பியவர்களுக்குத் துரோகம் செய்தல் இன்னொரு குற்றம்; இந்த இரண்டும் சேர்ந்து பெரும் பாவமாக மாறி விடுகிறது.
”நீங்கள் விபச்சாரத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ”அல்லாஹ்வும் அவன் தூதரும் தடை செய்த ஒன்றாகும். இது மறுமை நாள் வரை ஹராமாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், ”ஒருவன் தன் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வதை விட (மற்ற) பத்துப் பெண்களிடம் விபச்சாரம் செய்வது (தண்டனையில்) இலேசானதாகும்” என்று கூறினார்கள். ”திருட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ”அதை அல்லாஹ்வும் அவன் தூதரும் தடை செய்துள்ளார்கள். எனவே அது ஹராமாகும்” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”ஒருவன் பக்கத்து வீட்டில் திருடுவதை விட (மற்ற) பத்து வீட்டில் திருடுவது (தண்டனையில்) இலேசானதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அல்மிக்தாத் பின் அல்அஸ்வத் (ர­)

நூல்: அஹ்மத் 22734

அதாவது ஒருவர் பக்க வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வது, மற்ற பத்து பெண்களை விபச்சாரம் செய்தால் கிடைக்கும் தண்டனையை விட மிகக் கடுமையானதாகும்.
ஒருவர் பக்கத்து வீட்டில் திருடுவது, மற்ற பத்து வீட்டில் திருடுவதால் கிடைக்கும் தண்டனையை விட மிகக் கடுமையானதாகும்.
மறுமையில் முறையிடுதல்
அண்டை வீட்டாருக்கு நலம் நாடாமல் தான் மட்டும் நன்றாக இருந்தவனுக்கு எதிராக அவனது அண்டை வீட்டான் அல்லாஹ்விடம் முறையிட்டு நீதி கேட்பான்.
தன் அண்டை வீட்டாருடன் தொடர்புள்ள எத்தனையோ பேர், அல்லாஹ்விடம், ”என் இறைவா! இவன் என்னை (வீட்டுக்குள்) விடாமல் கதவை தாளிட்டுக் கொண்டான்; நல்லதை (எனக்கு தராமல்) தடுத்தான்” என்று மறுமை நாளில் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­)
நூல்: அதபுல் முஃப்ரத் 111

நன்மையான காரியங்களில் கூட்டாகுதல்
மார்க்கம் தொடர்பான மற்றும் நல்ல காரியங்களில் கூட்டாக செயல்படும் போது கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன. அண்டை வீட்டாருக்கு நன்மையான காரிங்களை எடுத்துச் சொல்லுதல், தீமையான காரியங்களைச் செய்தால் அதைத் தடுத்தல், நற்காரியங்கள் நடக்கும் சபைகளுக்கு அழைத்துச் செல்லுதல், தவறும் பட்சத்தில் கேட்ட நல்ல செய்திகளை அண்டை வீட்டாருக்குச் சொல்லுதல் என்று நற்காரியங்களில் கூட்டாக செயல்பட்டு நன்மைகளை அள்ளிச் செல்ல வேண்டும். நபித்தோழர்கள் இவ்வாறு நற்காரியங்களில் கூட்டாகச் செயல்பட்டுள்ளனர்.
நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான எனது அண்டை வீட்டுக்காரரும், உமைய்யா பின் ஜைத் என்பாரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன்.

அறிவிப்பவர்: உமர் (ர­)
நூல்: புகாரீ 89

திருக்குர்ஆன் அறிவுரைகள், நபிகளாரின் விளக்கங்களை முறை வைத்துக் கற்று வந்த நபித்தோழர்களைப் போல் அண்டை வீட்டார்கள் சேர்ந்து போக முடியாத நேரங்களில் ஒருவர் சென்று நல்ல செய்திகளைக் கேட்டறிந்து தம் அண்டை வீட்டாருக்கும் எடுத்துச் சொல்­ நன்மையில் கூட்டாக வேண்டும்.
அல்லாஹ்விடம் சிறந்தவர்
”நண்பர்களில் அல்லாஹ்விடம் சிறந்தவர் தம் நண்பர்களிடம் சிறந்தவர்களாக இருப்பவர்களே! பக்கத்து வீட்டாரில் அல்லாஹ்விடம் சிறந்தவர், தம் பக்கத்து வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ர­)
நூல்: திர்மிதீ 1867)

நல்ல அண்டை வீட்டார்
”நல்ல அண்டை வீட்டார் அமைவது, நல்ல வாகனம் கிடைப்பது, விசாலமான வீடு இருப்பது ஆகியவை ஒரு மனிதனின் நற்பேறில் உள்ளதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 14830

தொல்லையைப் பொறுத்துக் கொள்ளுதல்
அண்டை வீட்டார் என்று வரும் போது சில பிரச்சனைகள் ஏற்படத் தான் செய்யும். அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, வாழ்நாள் பகைவர்களாக மாறி விடாதீர்கள்.
அவர்கள் தரும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு அவருக்குச் சரியான அறிவுரைகளைக் கூறி திருத்தினால் இறைவனின் பேரருள் கிடைக்கும்.
ஒரு மனிதனுக்குத் தொல்லை தரும் அண்டை வீட்டார் இருக்கிறார்கள். அவரோ அவரின் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரின் வாழ்வு, சாவுக்குப் போதுமானவனாக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஹாகிம் 2446)
அண்டை வீட்டாரின் உரிமைகள் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்வமான செய்திகளைப் பார்த்தோம்.
இது தவிர அண்டை வீட்டார் தொடர்பாக ஆதாரமற்ற செய்திகளும், பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. அந்தச் செய்திகளையும் அவற்றின் தரத்தையும் பார்ப்போம்.
அண்டை வீட்டார் தொடர்பாக வந்துள்ள ஆதாரமற்ற செய்திகள்
உள்ளத்தின் கோபத்தைப் போக்கும்
அன்பளிப்புச் செய்யுங்கள்! ஏனெனில் அன்பளிப்பு உள்ளத்தின் கோபத்தைப் போக்கி விடும். ஓர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பின் துண்டை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை இழிவாகக் கருத வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)
நூல்: திர்மிதீ 2056

இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே இந்த ஹதீஸின் இறுதியில், ‘இதன் மூன்றாவது அறிவிப்பாளர் அபூமஃஷர் என்பவரை அவரின் நினைவாற்றல் தொடர்பாகப் பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
வீட்டுப் பொருட்களை வீதியில் எறியுங்கள்
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து தன் அண்டை வீட்டாரைப் பற்றி புகார் செய்தார். ”நீ சென்று பொறுமையாக இரு!” என்று கூறினார்கள். அந்த மனிதர் (மீண்டும்) இரண்டாம் தடவையோ அல்லது மூன்றாம் தடவையோ (புகார் கூற) வந்த போது நபி (ஸல்) அவர்களிடம் ”நீ சென்று உன் வீட்டுப் பொருட்களையெல்லாம் வீதியில் எறி! மக்கள் என்னவென்று விசாரிப்பார்கள். நீர் அவர்களிடம் விவரத்தைக் கூறு! மக்கள் அவரைச் சபிப்பார்கள்; அல்லாஹ்வும் அவ்வாறே செய்வான்” என்று கூறினார்கள். அவரும் அவ்வாறு செய்தார் (நபிகளார் சென்னபடியே நடக்கவும் செய்தது. இதன் பின்னர்) அவரின் அண்டை வீட்டுக்காரர் வந்து, ”நீர் உம் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்! (இனிமேல்) நீ வெறுக்கும் எதையும் என்னிடம் காண மாட்டீர்!” என்று கூறினார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)
நூல்: அபூதாவூத் 4486

இச்செய்தியில் இடம் பெற்றிருக்கும் மூன்றாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் அஜ்லான் என்பவரின் நினைவாற்றல் தொடர்பாக ஹதீஸ்கலை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். ‘இவர் நல்லவர் எனினும் அபூஹுரைரா (ர­) அவர்களின் செய்தியில் இவருக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது’ என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (இந்தச் செய்தியும் அபூஹுரைரா மூலமாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளது.) மேலும் இமாம் முஸ்­ம் அவர்கள் இவரை ஆதாரமாகக் கொள்ளவில்லை. இவரின் செய்திகளை துணைச் சான்றாகவே குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: தஹ்தீபுத் தஹ்தீப், தக்ரீபுத் தஹ்தீப்) மேலும் இவரை பிற்காலத்தில் வந்த ஹதீஸ்கலை அறிஞர்கள் அவரின் நினைவாற்றல் தொடர்பாக விமர்சனம் செய்துள்ளனர். இவரது 13 செய்திகளை இமாம் முஸ்­ம் பதிவு செய்துள்ளார்கள். இவை அனைத்தையும் துணைச் சான்றுகளாகவே கொண்டு வந்துள்ளார்கள் என்று ஹாகிம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
பிற்கால சோதனை
”என்னுடைய இந்தச் சமுதாயம் எனக்குப் பின்னர் சோதனைக்கு உட்படுத்தப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”அல்லாஹ் வின் தூதரே! எந்த முறையில்?” என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அண்டை வீட்டுக்காரன், தன் அண்டை வீட்டுக் காரனின் உரிமையை அறிந்திருக்க மாட்டான்” என்று கூறினார்கள். (நூல்: ஹக்குல் ஜார், பக்கம்: 2)
இந்த செய்தியும் ஆதாரப் பூர்வமானது அல்ல! இமாம் தஹபீ அவர்கள் ‘இது (நபிகளார் பெயரில்) இட்டுக்கட்டப்பட்டது’ என்று கூறியுள்ளார்கள்.

Sunday 7 June 2009

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!

இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம். ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள். இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது. இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும்! கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது! ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள். உணவு, உடை அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, ”நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி) நூல் : அபூதாவூத் 1830

நாம் சாப்பிடும் போது நம்முடன் நமது மனைவியை சாப்பிடச் செய்ய வேண்டும் என்று இங்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். கணவன் சாப்பிட்ட எச்சிலைத் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை எச்சில் தொட்டியில் தூக்கி எறிகின்றார்கள். நமக்கு ஆடை எடுத்தால் மனைவிக்கும் சேர்த்து ஆடை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றார்கள்.

அத்துடன் மட்டும் நபி (ஸல்) அவர்கள் நிற்கவில்லை. உனது மனைவிக்கு நீ ஊட்டி விடு, அதற்குக் கூலியும் கிடைக்கும் என்று கூறுவதைப் பார்க்கிறோம். ”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப் படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : புகாரி 56

சுய மரியாதையைப் போற்றுதல் மனைவியை அடிக்க வேண்டிய சில கட்டங்கள் வாழ்க்கையில் வரும். இது போன்ற கட்டங்களில் கன்னத்தில், முகத்தில் அறைந்து விடக் கூடாது என்ற நல்ல பண்பை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். அதனால் மனைவியை அடிப்பதற்கு இந்த ஹதீஸ் ஏகபோக உரிமை அளித்துள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ”நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல் : புகாரி 4942, 5204

மனைவியை அடித்து விட்டு அவள் பக்கத்தில் போய் படுப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? என்று இந்த ஹதீஸ் கேட்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவிமார்களை அடித்ததில்லை என்பதை இங்கு நாம் உணர வேண்டும். அடுத்ததாக ‘பொது இடங்களில் வைத்து மனைவி மீது வெறுப்பை நெருப்பாக அள்ளித் தட்டி விடாதே’ என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். இன்று நம்மில் பலர் மனைவியருக்கு சுயமரியாதை என்ற ஒன்று கிடையாது என்று முடிவு செய்து விட்டார்கள்.

அதனால் தான் பலர் முன்னிலையில், பொது இடங்களில் திட்டித் தீர்த்து விடுகின்றார்கள். நிச்சயமாக இது ஒரு நல்ல பண்பல்ல! இத்தீய பண்பை ஒரு முஸ்லிம் அறுத்து எறிந்து விட வேண்டும். மனைவி உறங்கும் போது அவளது உறக்கத்திற்கு இம்மியளவு கூட மதிப்பு கொடுப்பது கிடையாது.

பகலில் மாடாய் உழைத்து விட்டு, இரவில் அயர்ந்து உறங்கும் போது கொஞ்சம் உறங்கட்டுமே என்று உறங்க விடுவது கிடையாது. வேலைக்காரியை எழுப்புவது போல் அலட்சியக் குரலில் முதலில் எழுப்பிப் பார்ப்பது, அதில் அவள் விழிக்கவில்லை என்றால் கழுதையைப் போன்று காட்டுக் கத்தல் கத்துவது, அதற்கும் சரிப்படவில்லை என்றால் காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களால் மனைவியை மிருகத்தை விடக் கேவலமாக நடத்தும் காட்டுமிராண்டித்தனம் நம்மிடம் சர்வ சாதாரணமாகத் தொடர்கின்றது.

இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்! ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தமது மனைவி ஆயிஷா (ரலி) அருகில் வந்து படுக்கின்றார்கள். ஆயிஷா (ரலி) உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம் சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃலிக்கு செல்கின்றார்கள். உறங்குவது போல் காட்டிக் கொண்ட ஆயிஷா (ரலி) எழுந்து, நபி (ஸல்) அவர்களை பகீஃ வரை பின்தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள். மூச்சிறைப்பின் காரணமாக ஆயிஷா (ரலி) அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் விசாரிக்கின்றார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக சொல்லப் போகின்றாயா? அல்லது அல்லாஹ் எனக்கு உண்மையை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே ஆயிஷா (ரலி) நடந்த நிகழ்வைக் கூறுகின்றார்கள். ”பகீஃலிக்கு சென்று பாவமன்னிப்பு தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து என்னிடம் கூறினார்கள். அதற்காக நான் புறப்பட்டேன். அப்போது நீ உறங்குகின்றாய் என்றெண்ணினேன். உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன். அதன் மூலம் நீ வெறுப்படைவதை அஞ்சினேன்” என்று தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியாரிடம் தெரிவிக்கின்றார்கள். (ஹதீஸின் சுருக்கம்) நூல் : முஸ்லிம் 1619

இங்கு நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியருகே வந்து படுக்கும் போதும் எழுப்பவில்லை. அதன் பிறகு வெளியே செல்லும் போதும் எழுப்பவில்லை. காரணம் மனைவியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பது தான். ஆனால் நம் நாட்டிலோ ‘பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி’ என்று பதிகம் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். தனது ஆணாதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறை அன்றைய தினம் மட்டும் கடைப்பிடித்த அபூர்வ நடவடிக்கை அல்ல! அது அவர்களின் அன்றாட வாடிக்கையாக இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கி விட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 1119

மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ”நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) ”அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, ”உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ”அப்படியானால் செல்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (950)

இங்கு மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த ஒரு மாபெரும் தலைவரை நாம் காண்கின்றோம். மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வைப் பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம்! இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது? இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச் சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணுகின்றோம். நன்மையல்லாத காரியத்தையா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மனைவியின் உணவு, உடை, அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிப்போமாக! மாநபி வழியில் நடை போடுவோமாக!

Saturday 30 May 2009

படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்

அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள்.
”அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் ‘அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6307

”எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4870

”மக்களே! அல்லஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4871

எப்போதும் இறைச் சிந்தனையில் இருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உள்ளம் கொஞ்சம் அந்தச் சிந்தனையை விட்டு விலகினால் கூட அதற்காக பாவமன்னிப்பு தேடுகின்றார்கள். ஆனால் நாம் சிறு சிறு பாவங்களால் முற்றுகையிடப்பட்டுள்ளோம். அன்றாடம் ஆயிரக்கணக்கான பாவங்களைச் செய்து விட்டு கல்லாக உட்கார்ந்திருக்கின்றோம். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது கிடையாது. ஒரு மாதிரியான மிதப்பில் இருக்கின்றோம். இது போன்ற பாவங்களை விட்டு விலகுவதுடன் அன்றாடம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி அதற்குரிய பலன்களை அடைய வேண்டும்.
வேதனையை விட்டும் பாதுகாவல்

(முஹம்மதே!) நீர் அவர்களுடன் இருக்கும் போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவ மன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை. (அல்குர்ஆன் 8:33)
பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தண்டனை இறங்காது என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.
மக்கள் செல்வமும், மழை நீர் வளமும்
உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காக சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான். (அல்குர்ஆன் 71:10லி12)
அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினால் அவன் மழை, செல்வங்கள், மக்கள் ஆகியவற்றைக் கொண்டு நமக்கு உதவுவான் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
ஸஹர் நேரத்தில்…

அவர்கள் இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள். (அல்குர்ஆன் 51:18)
(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.) (அல்குர்ஆன் 3:17)
இந்த வசனங்களில் இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பற்றி சொல்லும் போது, ஸஹர் நேரத்தில் அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனங்களுக்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவின் பிற்பகுதியில் பாவமன்னிப்பு தேடுவதை வலியுறுத்தியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, ”என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்” என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1145

சுவனத்தைப் பெற்றுத் தரும் ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

”அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க. வ வஃதிக்க மஸ்ததஃத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஃத்து. அபூஉ லக்க பி நிஃமத்திக்க அலைய்ய வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த.”
(பொருள் : அல்லாஹ்வே! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதிமொழியையும், வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளி­ருந்து உன்னிடம் பாதுகாப்பு கோருகின்றேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கின்றேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக் கொள்கின்றேன். ஆகவே. என்னை நீ மன்னிப்பாயாக. ஏனெனில் பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.)
என்று ஒருவர் கூறுவதே தலை சிறந்த பாவமன்னிப்பு கோரல் (ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்) ஆகும். யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும், தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டு, காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ர­), நூல் : புகாரி (6306)

தொழுகையில் ஸலாம் கொடுத்ததும்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பும் போது மூன்று தடவை (அஸ்தஃக்ஃபிருல்லாஹ் என்று) பாவமன்னிப்பு தேடுவார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி), நூல் : முஸ்லிம் 931